காலை 7.30 மணிக்கு தூக்கு: 9.30க்கு ஏர்வாடா சிறையிலேயே கசாப் புதைப்பு
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டும் தான் உயிருடன் சிக்கினான்.
பாகிஸ்தான் தீவிரவாதியான கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவனது கருணை மனுவை நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிட கடந்த 8ம் தேதியே முடிவு செய்யப்பட்ட போதிலும் அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ஏர்வாடா சிறையிலேயே கசாபின் உடல் புதைக்கப்பட்டதாக மகாரஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த கசாப் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கசாபின் உடலை வாங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.