கடும் அமளிக்கு இடையே ராஜ்யசபாவில் 'பரிந்துரைகளுடன்' தாக்கலான லோக்பால் மசோதா
மக்களவை
மக்களவை இன்று காலை கூடியதும் பிரதமர் மன்மோகன் சிங் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்தார். அதன் பின்னர் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி விவகாரம் புயலைக் கிளப்ப பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இரு அவைகளும் மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் திங்கள்கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்பால் மசோதா
மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவை கூடியபோது கடும் அமளி நீடித்தது. பகுஜன் சமாஜ் கட்சியினர், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் மாநிலங்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதில் மாநிலங்களவைத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
லோக்பால் பரிந்துரைகள் என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லோக்பால் மசோதாவுக்கான தேர்வுக் குழுத் தலைவர் சத்யவர்த் சதுர்வேதி, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று பரிந்துரைகளை தயார் செய்வது என்பது மிகவும் கடினமான பணி. ஏனெனில் இது சட்ட ரீதியான விவகாரம். அனைத்து கட்சியினரும் தேச நலன் கருதி எந்த ஒரு விவாதமுமின்றி தங்களது கருத்துகளை முன்வைத்தனர். விவாதங்களுக்குப் பிறகு மொத்தம் 12 திருத்தங்கள் லோக்பால் மசோதாவில் சேர்க்க பரிந்துரைக்கப்ப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.
பிரதமரையும் வெளிவிவகாரம், தேச பாதுகாப்பு, அணுசக்தி, சர்வதேச உறவுகள் அல்லாத விவகாரங்களில் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது, சிபிஐக்கு என தனியே ஒரு விசாரணை இயக்குநரை ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிப்பது ஆகியவை லோக்பால் மசோதாவில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டவைகளில் முதன்மையானது.
அடுத்து என்ன?
கடந்த ஆண்டின் இறுதியில் மக்களவையில் மக்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறவில்லை. மாநிலங்களில் லோக் ஆயுக்தாக்களை நியமித்தல், சிபிஐ லோக்பாலுக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பிறகு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். மாநிலங்களவையில் நிறைவேறினால் மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு திருத்தப்பட்ட லோக்பா மசோதா அனுப்பி வைக்கப்படும்.