சர்ச்சையில் பால்தாக்கரே நினைவிடம்: சிவாஜி பூங்காவில் அமைக்க ராஜ் தாக்கரே எதிர்ப்பு
மும்பை: மும்பையில் மரணமடைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் நினைவுச் சின்னத்தை சிவாஜி பூங்காவில் அமைப்பதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையில் பால் தாக்கரேவுக்கு சிவசேனா கட்சி சார்பில் வியாழக்கிழமையன்று சிறப்பு அஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் பலரும் பால் தாக்கரேயின் நினைவாக அவர் விரும்பிய சிவாஜி பூங்காவில் நினைவிடம் அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். சிவசேனா கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவசேனாவின் இந்த கோரிக்கைக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் பால்தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே சிவாஜி பூங்காவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
பால் தாக்கரே உயிருடன் இருந்தபோதே, அவரது கன் உத்தவ் தாக்கரேவும், அவரது உறவினர் ராஜ் தாக்கரேவும் இரு துருவங்களாகவே இருந்தனர். அதனால்தான் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை புதிதாகத் துவக்கினார் ராஜ் தாக்கரே. இந்நிலையில், பால் தாக்கரேவின் நினைவிடம் அமைப்பதில் சர்ச்சை உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரஸ் தரப்போ, நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் எந்த முடிவு எடுக்க முடியாமல் குழம்பிப் போயுள்ளது. அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.
சிவாஜி பார்க்கில்தான் 1966 ம் ஆண்டு சிவசேனா கட்சியை தொடங்கினார் பால்தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.