சபரிமலையில் தரமற்ற அரிசியில் செய்த 1 லட்சம் அப்பம் பாக்கெட்டுகள் பறிமுதல்
திருவனந்தபுரம்: சபரிமலை, பம்பை பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், கடைகளில் நடத்திய சோதனையின்போது அங்கிருந்த தரமற்ற அரிசியில் செய்த சுமார் 1 லட்சம் அப்ப பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் அரவணை, அப்பம் போன்றவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும் என கேரள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலையில் தரமற்ற அரிசியில் செய்யப்ப்ட அப்பம் மற்றும் பொருட்கள்
கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அனுகுமார் தலைமையிலான அதிகாரிகள் சபரிமலை, பம்பை பகுதிகளில் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள உணவு விடுதி, கடைகளில் கடந்த 3 நாட்களாக இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது தரமற்ற அரிசியில் தயார் செய்யப்பட்ட 1 லட்சம் அப்பம் பாக்கெட்டு்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவற்றை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.