தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: திருவண்ணாமலையில் வரும் 27-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்க உள்ளதை ஒட்டி 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தீபத்திருவிழாவை ஒட்டி வரும் 27-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் காலை 10.10க்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருவண்ணாமலையிருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு, சென்னைக்கு நள்ளிரவு 2.15 வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், கண்ணமங்கலம், ஆரணி, போலூர், அகரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஹவுரா விரைவு ரயில் சிறப்பு நிறுத்தமாக நவம்பர் 27 மட்டும் திருவண்ணாமலையில் நின்று செல்லும்.
இதுதவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.