சட்டப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் இந்தியாவுக்கு 78; இலங்கைக்கு 8ம் இடம்!
டெல்லி: உலகில் நீதி நிர்வாக முறையில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறும் நாடுகளில் இந்தியா 78ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு 8ம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சிக் குறியீடு-2012
உலக நீதி நிர்வாக திட்டம் என்ற அமைப்பு, உத்தரவாதமான அனைத்து சிவில் நிர்வாக வாய்ப்புகள் தொடர்பாக 97 நாடுகளில் ஆய்வு நடத்தி "சட்டத்தின் ஆட்சிக் குறியீடு-2012′ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான அரசாங்கம்
சுதந்திரமான நீதிமுறை, பேச்சுரிமையைப் பாதுகாப்பது, வெளிப்படையான அரசாங்கம் இவற்றில் இந்தியா உலகளவில் 50ஆவது இடத்திலும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 4-வது இடத்திலும் உள்ளது.
நிர்வாகத்தில் 79 வது இடம்
இந்தியாவில் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இந்த விஷயத்தில் 79ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவு மக்களுக்கும் எல்லாவிதமான உரிமைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
தாமதமாகும் நீதி
அதேபோல நீதிமன்றங்களில் இடப்பற்றாக்குறை, செயலாக்கம் மற்றும் வழக்குகளை நடத்துவதில் தாமதம் உள்ளிட்டவை முக்கிய குறைபாடுகளாக உள்ளன. எனவே, இந்த வகைப்பட்டியலில் இந்தியாவுக்கு 78ஆவது இடம் தரப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறிப்பாக குற்றங்கள், மக்களிடையே மோதல் தன்மை, அரசியல் வன்முறைகள் போன்றவை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன.
லஞ்சத்தில் 83 வது இடம்
லஞ்சம் மற்றும் ஊழல் இந்தியாவில் முக்கிய பிரச்னையாக உள்ளது (83ஆவது இடம்). அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பாகுபாடு காட்டுதல் போன்றவை போலீஸ் துறையில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
இலங்கைக்கு 8 ம் இடம்
தெற்கு ஆசிய நாடுகளில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில், நமது அண்டை நாடான இலங்கைக்கு 8ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவு நாடுகளில் இலங்கை பல்வேறு விஷயங்களில் விஞ்சி நிற்கிறது.
மனித உரிமை மீறல்
வெளிப்படையான நிர்வாகம், சிறப்பான சட்டம்-ஒழுங்கு முறை, லஞ்சம்-ஊழலை கட்டுப்படுத்தி வைத்திருப்பது இவற்றில் வேகமான செயல்பாடுகள் காணப்படுகின்றன.
அதே சமயத்தில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள், உள்நாட்டுப் போருக்கு பின்னரும் தொடரும் அவலம் போன்றவை கவலை அளிக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.