குஜராத் அரசை பற்றி அவதூறாக பேசுவதா?: சோனியாவை மிரட்டும் மோடி
அகமதாபாத்: குஜராத் மாநில அரசைப் பற்றி பொய்யான தகவகலைக் கூறி அவதூறாக தொடர்ந்தும் பேசினால் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி எச்சரித்திருக்கிறார்.
சோனியா பிரச்சாரம்
குஜராத்தின் மாண்ட்வியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சோனியா காந்தி, குஜராத் மாநிலத்தில், விவசாயிகளுக்கு மோடி அரசு ஒன்றும் செய்யவில்லை; மத்திய அரசு கோடி கோடியாக நிதி அளித்தும் அந்த நிதி எங்கே சென்றது எனதெரியவில்லை. விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து சலுகை வழங்கியது. ஆனால், மோடி இதனை மறைக்கிறார் என்றார்.
மோடி பதிலடி
ஆனால் ஜாம்நகர் மற்றும் அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளி்ல் இதுவரை 1.23 லட்சம் கோடி பருத்தி பேல்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் அரசு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் 7 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் குஜராத்துக்கு ஏற்பட்டது. ஓட்டுகளுக்காக பொய்யான தகவலை தரவேண்டாம். தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற எனது அரசு பற்றி அவதூறாக பேச வேண்டாம். இல்லையெனில் வழக்கினை சந்திக்க நேரிடும். டெல்லியில் மாலை 6.30 மணிக்கு மேல் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியவில்லை. ஆனால், குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சோனியா கூறுகிறார். இதுபற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என்றார் மோடி.