கருகும் பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் போதுமா? ராமதாஸ் கேள்வி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.
இறுதித் தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முழு அதிகாரத்தை பயன்படுத்துக : திருமாவளவன்
இதேபோல் காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வந்துவிடப் போவதில்லை. எத்தனை அமைப்புகள் எத்தனை ஆணைகளைப் பிறப்பித்தாலும் தண்ணீர் தருவதில்லை என்பதில் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது.
மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தின் தலையில் சுமத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல. மத்திய அரசு தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.