புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: திமுக- காங். அணியில் தேமுதிக?
புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் வரும் ஜனவரி 4,8,10 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
திமுக-காங். அணியில் தேமுதிக
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் முட்டி மோதிக் கொண்டிருந்த நிலையில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் பிரிக்க முடியாத உறவுகளாகிவிட்டன.அதே நேரத்தில் அதிமுக அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட தேமுதிகவோ அதிமுக அரசின் அடக்குமுறையை எதிர்க்க துணை தேடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ்-தேமுதிக இடையே ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் கூட திமுகவின் ரிட்டனால் ஆஃப் ஆகிவிட்டன.
இந்நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முன்னோட்டமாக புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் விரைவில் முடிவுகள் எடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இதற்கு க்ரீன் சிக்னல் காண்பிக்கும் வகையில் திமுகவும்- தேமுதிகவும் கடந்த சிலவாரங்களாக நெருங்கி வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கூட, திமுகவுடனான கூட்டணி இருக்கலாம் என்ற்று பகிரங்கமாகவே கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாமக
புதுவை உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வியாழக்கிழமையன்று பெறப்பட்டன. அப்போது அனந்தராமன் வெளியிட்ட அறிக்கையில், பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதிய கூட்டணி என்று பேசிவரும் பாமக, புதுச்சேரியில் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது
அதிமுக
இதனிடையே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் பெயரை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக புதுச்சேரி மாநிலத்திற்கு (காரைக்கால் நீங்கலாக) எம்.சி.சம்பத் ,(கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்) நா.பாலகங்கா, எம்.பி., (வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்) காரைக்கால் மாவட்டத்துக்கு, ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், உணவுத்துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான இடங்களையும் அதிமுக அறிவித்திருக்கிறது. புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் நீங்கலாக) - உப்பளம் தொகுதியில் உள்ள புதுச்சேரி மாநிலக் கழக அலுவலகம், காரைக்கால் மாவட்டம்-9, பாரதியார் ரோடு, கோட்டுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவோர் கட்டணமாக, நகரசபை தலைவர் -ரூ.10 ஆயிரம், நகரசபை உறுப்பினர் (கவுன்சிலர்) -ரூ.2 ஆயிரம், கொம்யூன் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர் -ரூ.1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கபப்ட்டிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட இருக்கின்றன.