குஜராத்: 2-ம் கட்ட சட்டசபை தேர்தல்! பிரச்சாரம் ஓய்ந்தது!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
குஜராத் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 87 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 70.75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் 2-ம் கட்டமாக 95 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 820 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் 49 பேர் பெண்கள். மொத்தம் 1,98,99, 501 பேர் வாக்களார்கள். அனைத்து வாக்குகளும் டிசம்பர் 20-ந் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்போம் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பாஜகவின் மேனகா காந்தி, 40 ஆண்டுகாலமாக இந்தியாவில் வசித்து வரும் சோனியா காந்தி இன்னமும் ஹிந்தியை எழுதி வைத்துத்தான் படிக்கிறார். அவரால் சரளமாக ஹிந்தியில் பேச முடியவில்லை என்று விமர்சித்திருக்கிறார்.
இறுதி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் போட்டிப் போட்டு பிரச்சாரம் செய்தனர்.