உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது ரயில்வே; விரைவில் கட்டணமும் உயர்கிறது!
ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் ரயில்வே பிளாட்பாரங்களில் விற்பனையாகும் பொருட்களுக்கு ஒரு விலையும், ரயில்களின் உள்ளே விற்கப்படும் பொருட்களுக்கும் ஒரு விலையும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது ரூ.10க்கு கிடைக்கும் 'ஜனதா' சாப்பாடு, இனி ரயில்களினுள் ரூ. 20க்கும், பிளாட்பாரங்களில் ரூ. 15க்கும் விற்கப்படவுள்ளது.
வழக்கமான சைவ உணவின் விலை ரூ. 30ல் இருந்து ரூ. 45 ஆகவும், அசைவ உணவின் விலை ரூ. 35ல் இருந்து ரூ. 50 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
காலை உணவின் விலை ரூ. 17ல் இருந்து ரூ. 25 ஆகவும், அசைவ சிற்றுண்டியின் விலை ரூ. 20ல் இருந்து 30 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
தற்போது ரூ. 18க்கு விற்கப்படும் இட்லி, கட்லட் போன்றவை இனி ரயில்களில் ரூ. 30க்கு விற்பனையாகும். அதே போல ரூ.12க்கு கிடைக்கும் ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ. 15 ஆக உயர்த்தப்படுகிறது.
கடந்த 21ம் தேதியே இதற்கான சுற்றறிக்கையை ரயில்வே அமைச்சகம் அனுப்பி விட்டது. விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரவுள்ளது.