ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... இது அமைதி காக்க வேண்டிய நேரம்- சோனியா காந்தி
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இந்த கொடிய மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வைத் தொடர்ந்து சோனியா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "நாட்டு மக்கள் தங்கள் சகோதரியை இழந்துவிட்டனர். அந்த துயரத்தைப் புரிந்து கொண்டுள்ளேன்.
இந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு பெண், குழந்தைகளின் தாய் என்ற முறையில் அனைவரின் உணர்வுகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.
உயிரிழந்த மாணவிக்கு கட்டாயம் உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிக்கு தகுந்த கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை," என்றார்.
ஆறுதல் கூறச் சென்ற ஷீலா தீட்சித்தை மறித்து ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் ஷீலா தீட்சித் சென்றார். அவர் ஜந்தர் மந்தரில் நுழைய போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரை மறித்தும் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அவர் அங்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி தனது அஞ்சலியை செலுத்திவிட்டுத் திரும்பினார்.