உடம்பு சரியில்லையாம்: காவல் நிலையத்தில் ஆஜராக 4 நாட்கள் டைம் கேட்கும் அக்பருத்தீன் ஒவைசி
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காஷிம்ஷெட்டி கருணாசாகர் என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்தபோது ஒவைசி லண்டனில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒவைசியின் குடல் பகுதியில் காயம் பட்டது. அதற்கு சிகிச்சை பெறத் தான் அவர் லண்டன் சென்றார். இந்நிலையில் அவர் இன்று காலை நாடு திரும்பினார். அவர் வருகையையொட்டி ஹைதராபாத் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டிருந்தனர். அவர் இன்று நிர்மல் நகர் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று கூறப்பட்டது.
முன்னதாக ஒவைசி நிர்மல் நகர் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்மல் நகர் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒவைசி நிர்மல் நகருக்கு வருகையில் அவரது வாகனத்திற்கு முன்பும், பின்பும் 30 முதல் 40 வாகனங்கள் பாதுகாப்புக்காக செல்லவிருக்கிறது என்று கூறப்பட்டது. மேலும் ஹைதராபாத், சைபராபாத், ரங்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத் மற்றும் ஆதிலாபாத் எஸ்.பி.க்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் இத்தனை ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்னும் 4 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.