டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: 2 குற்றவாளிகள் அப்ரூவராக விருப்பம்!
டெல்லி: டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளில் 2 பேர் அரசு தரப்பு சாட்சியாக அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடும் பேருந்தில்மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேரில் 4 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அனைவரும் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி கிளர் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
இவர்களில் பவன் குப்தா, வினய் சர்மா என்ற 2 குற்றவாளிகள் தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும் அப்ரூவராக மாற விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதே வழக்கில் ஓட்டுநர் ராம் சிங்கும் அவரது சகோதரர் முகேஷும் சட்ட உதவி வேண்டும் எனக் கேட்டனர்.
அதே நேரத்தில் இந்த கொடூர பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் சாட்சிகளாக மாறுவதால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
அனைவரது நீதிமன்ற காவலையும் 19-ந் தேதி வரை நீட்டித்த நீதிபதி குற்றப்பத்திரிக்கை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் இன்றும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 5வது குற்றவாளி அக்ஷய் தாக்கூரின் நீதிமன்ற காவல் 9-ந் தேதி முடிகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். 6வது குற்றவாளி மைனர் என்பதால் அவரது வழக்கை சிறுவர் நீதிமன்ற வாரியம் விசாரிக்க உள்ளது.