பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி வர்மா கமிஷனுக்கு திருமாவளவனின் 16 யோசனைகள்!
சென்னை: நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நீதிபதி வர்மா கமிஷனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆலோசனைகள் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக நாட்டிலுள்ள குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி வர்மா குழுவிடம் அரசியல் கட்சிகள் தமது ஆலோசனைகளை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நீதிபதி வர்மா கமிஷனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 16 ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்.
பாலியல் வன்கொடுமைக்கு அனைத்து பெண்களுமே ஆளாகிறார்கள் என்றாலும் தலித் பெண்கள் சாதிய வன்கொடுமை என்ற கூடுதல் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். இந்நிலையில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் தலித்துகள் ஆகிய சமூகத்தின் நலிந்த பிரிவினரைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள மசோதாக்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அளித்துள்ளார்.