கும்பமேளா: கங்கை, யமுனையில் மாசுபடுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதில் கும்பமேளா நடைபெறும் நிலையில் கங்கை, யமுனை நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
அலகாபாத்தில் நாளை மறுநாள் கும்பமேளா தொடங்குகிறது. இதையொட்டி டெஹ்ரி அணையில் இருந்து கங்கை நதி நீரை போதுமான அளவு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யமுனை நதியிலும் மாசு கலக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச அரசு, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கை நதியில் கலக்கிறது. அதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மாசு நதியில் கலக்காமல் தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகளை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.