கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்புக்கு ஒருவழியாய் டெண்டர் கோரிய தமிழக அரசு- திமுக நன்றி!
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பின்றி இருப்பதால் அதில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து சிலையை பராமரிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கன்னியாகுமரியில் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கன்னியாகுமரியில் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசு திருவள்ளுவர் சிலையை பராமரிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து நாகர்கோவிலில் விளக்க பொதுக் கூட்டம் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் சிலை பராமரிப்பு தொடர்பான சில பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது. இதையடுத்து இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அய்யன் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்க முன் வந்ததால் விளக்கப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக நாம் கொண்டிருந்த பெருங்கவலையாக குமரிக் கடல் அய்யன் வள்ளுவர் சிலைக்கான பராமரிப்பு, பாதுகாப்புப் பணிகள்; தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டு; "டெண்டர்" கோரும் பணிகளும் நடந்து வருகின்ற காரணத்தால், அதற்காக தமிழக அரசுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறப்போர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக் கொள்வதோடு, நாகர்கோவிலில் 19-1-2013 அன்று நடத்துவதாக இருந்த விளக்கப் பொதுக் கூட்டமும் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை திமுக தலைமைக் கழகம் அறிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.