நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு.. அபாண்டம் என்கிறார் 'மதிமுக' மல்லை சத்யா
சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும், காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் கருணகரனும் ஆக்கிமித்துள்ளதாக அகில பாரத வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சிவராஜன் தலைமையில் பலர் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலதக்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக 100 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதற்கு தகுதியின் அடிப்படையில் பெட்ரோல் பங்க் அமைக்க கருணாகரனுக்கு 26.11.2011 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்காக விண்ணப்பித்த சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அது கிடைக்காத காரணத்தினால் பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து செய்து வந்தனர்.
பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் அனைத்தும் இருந்ததனால் கருணாகரனுக்கு ஒதுக்கப்பட்டது. 1969ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் சாலவாக்கம் ஊராட்சியில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் நில எடுப்பிலிருந்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிட மக்களுக்கு அதே சாலவாக்கம் ஊராட்சியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நிலத்தை (எண்.36/1ஏ, 36/3ஏ) தான் கருணாகரன் கிரையம் பெற்றார். அவர் பெயரில் பட்டாவும் மாற்றலாகி உள்ளது. இந்த நிலத்தில்தான் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன், பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மீதும், வைகோ புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சதி செய்து, அதற்கு அப்பாவி மக்களை போராட தூண்டியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் சத்யா.