பாஜகவின் பிரதமர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க சிவசேனா கோரிக்கை
மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கோரியுள்ளார். இதற்கு மூத்த பாஜக தலைவர் ராம் ஜேத்மலானியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டணிக் கட்சிகளின் கருத்தை அறிய உடனடியாக கூட்டணியின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள இன்னொரு முக்கியக் கட்சியான சிவசேனா, பாஜக மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜை கட்சியின் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவ்த் கூறுகையில்,
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே சுஷ்மாவுக்கு தான் நாட்டை வழிநடத்திச் செல்லும் திறமை உள்ளது என்று நினைத்தார். பாலா சாஹேபின் வார்த்தை தான் எங்களுக்கு இறுதி. அதனால் பிரதமர் பதவிக்கு சுஷ்மா தான் பொருத்தமானவர் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ராஜ்கோட்டில் விளையாட அனுமதித்த மோடியை விமர்சித்து சிவசேனாவின் பத்திரிக்கையான சாமனா செய்தி வெளியிட்டது. அதில்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பிரச்சனை ஏற்பட்டதால் வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 22 பேர் கொண்ட பாகிஸ்தான் குழுவை குஜராத் மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மட்டும் ராஜ்கோட்டில் விளையாட குஜராத் அரசு அனுமதித்தது. மோடி அரசு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் திருப்பி அனுப்பியிருந்தால் அதை பாராட்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.