வழிப்பறி செய்து ஆடம்பரமாக வாழ்ந்த கோவில்பட்டி போலீஸ்காரர் சஸ்பெண்ட்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கொள்ளையர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இது குறித்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் வழிப்பறியில் ஈடுபட்ட கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸ்காரர் காவேரி மணியனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகள் கோவில்பட்டி அருகே உள்ள ஓலைக்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், கயத்தாறைச் சேர்ந்த கணேசன், சுடலைமணி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கைதான போலீஸ்காரர் காவேரி மணியன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழிப்பறியில் எப்படி ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
காவேரி மணியன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த நான் 2003ல் போலீஸ் பயிற்சி முடித்தபின் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டேன். மனைவி மற்றும் குழந்தைகளுடன் இனாம் மணியாச்சியில் வசித்து வருகிறேன்.
விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் ஓலைக்குளம் வெங்கடேஷ், கயத்தாறு கணேசன், சுடலைமணி ஆகியோருடன் பைக்கில்
சென்று தனியாக செல்லும் பெண்களிடம் நகை, பணத்தை பறித்தோம். அப்போது பெண்கள் மீது மிளகாய் பொடி தூவுவோம். செக்ஸ் உறவு வைக்கும் போது அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி பணிய வைப்போம். வழிப்பறி செய்த பணம் மற்றும் நகைகளை 4 பேரும் பிரித்து ஆடம்பரமாக செலவு செய்தோம். திருடிய பணத்தை கொண்டு கார், பைக் வாங்கினோம். என்னை பற்றி யாருக்கும் சந்தேகம் வராததால் கடந்த 2 வருடமாக தொடர்ந்து திருடி வந்தோம்.
கடந்த 29ம் தேதி கோவில்பட்டி பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற செந்தில்குமார், அவரது உறவினர் செல்வியை தாக்கி செயின், மோதிரம் ஆகியவற்றை பரித்தோம். அப்போது செல்வி கூச்சலிட்டதால் பொதுமக்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நான் கொடுத்த தகவலால் தப்பி ஓடிய கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்துவிட்டனர். சில நேரங்களில் நாங்கள் வழிப்பறி செய்த நபர்களே நான் வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் புகார் செய்வர். அப்போது நான் எதுவும் தெரியாதபடி நடந்து கொள்வேன். திருட்டில் ஈடுபடுவதற்காக நான் அடிக்கடி விடுமுறை எடுப்பேன். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட கார், பைக்கை வைத்து தொழிலை திறமையாக நடத்த திட்டமிடடோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.