ஒடிஷாவைப் போல கூடங்குளத்திலும் களம் இறங்குங்கள்: ராகுலுக்கு அழைப்பு!
சென்னை: ஒடிஷாவில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக பழங்குடியின மக்களுக்காக போராடியதைப் போல கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு ராகுலுக்கு அனுப்பிய கடிதத்தில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜ் ஆகியோர் மீது 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயர் பதிவு செய்யப்பட்ட 5296 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெயர் பதிவு செய்யாத 2,21,483பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த போராட்டத்திலும் இத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2011-ம் ஆண்டு அரைகுறையாக தவறுகள் நிறைந்த சுற்றுச்சூழல் ஆவணங்களை கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக பேரிடர் பயிற்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை சம்பந்தமாக நாங்கள் தகவல் கேட்டதற்கு எங்களின் மீது கைது நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். அணுஉலை பிரச்சினையை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் நியாம்கிரி மலைப்பகுதியில் வேதாந்தா என்ற நிறுவனம் ரூ45,000கோடி முதலீட்டில் பாஸ்பைட் சுரங்க தொழிற்சாலையை தொடங்கியது. அதனை மலைவாழ் மக்களின் நலனுக்காக நீங்கள் எதிர்த்தீர்கள். மலைவாழ் மக்களுக்காக எப்போதும் போராடும் வீரன் நான் என்று மக்களுக்கு உத்தரவாதம் கொடுத்தீர்கள். அந்த மக்கள் உங்களை சகோதரனாக பார்த்தார்கள்.
அதேபோல் கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினையிலும் உண்மையான முறையில் தீர்வுகண்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளவில்லை என்றால், வருகிற நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம். கூடங்குளம் அணுஉலையை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி இந்தியாவில் தொடங்கப்படவுள்ள அனைத்து அணுஉலை திட்டங்களையும் நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.