ஜூன் மாதத்துக்குப் பின் மின்வெட்டே இருக்காது: சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தேமுதிகவின் பார்த்திபன், வானத்தில் மின்வெட்டு இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் இன்றுகூட கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற வகையில் உறுப்பினர் பேசுகிறார். ஜூன் மாதத்துக்குப்பிறகுதான் மின்வெட்டு இருக்காது என்று சொல்கிறோம். ஜூன் மாதம் இன்னும் வரவில்லையே. இப்போதுகூட மின் உற்பத்தி அதிகரித்துக்கொண்டே வருகிறது. 180 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்உற்பத்தி 199 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து இன்று 225 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு உற்பத்தியாகிறது. எனவே மின் உற்பத்தி அதிகமாகிக்கொண்டே வருவதால் மின்வெட்டும் குறைந்து கொண்டே வருகிறது. இது மக்களுக்கு தெரியும்.
எனவே மின்வெட்டு குறித்து புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கும் இல்லை. உங்கள் தலைவருக்கும் இல்லை. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது. எனவே மின்சார பிரச்சினை குறித்து நாங்கள் என்ன சொன்னாலும், நீங்கள் சொன்னதையேதான் சொல்கிறீர்கள். உங்கள் எண்ணம் கறுப்பு எண்ணம், அதனால்தான் கறுப்பு சட்டை போட்டு வந்துள்ளீர்கள் என்றார் அவர்.