வரும் 15ல் பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்: விஞ்ஞானிகள்
டெல்லி: வரும் 15ம் தேதி ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. அவ்வாறு அது செல்கையில் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 15ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை 2013 டிஏ14 என்ற விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்ததும் இல்லை.
இந்த விண்கல் பூமியின் மீது மோதாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. ஆனால் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்யும் இந்த விண்கல் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.