4 வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றுவதை எதிர்த்து வழக்கு: கொளத்தூர் மணி
பின்னணி
1993-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வீரப்பன் குழுவினர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை தலைவர் ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட 22 பேர் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் உள்ளிட்ட 4 பேர், மைசூர் தடா நீதிமன்றம் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆயுள்தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர். அந்த கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர்களை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொளத்தூர் மணி
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை விதிக்க முடியாது என்று நமது அரசியல் சட்டம் சொல்கிறது. வீரப்பன் கூட்டாளிகள் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். இது ஆயுள் தண்டனை அனுபவித்தது போல ஆகி விட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது 2-வது தண்டனையாகும். இதன்படி அவர்களுக்கு 2 தண்டனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு சட்டம் அனுமதி வழங்கவில்லை. சட்டத்தில் அதற்கான விதிகளும் இல்லை. எனவே 4 பேரையும் தூக்கில் போடக்கூடாது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார் அவர்.
மொகித் செளத்ரி
ராஜிவ் கொலையாளிகளுக்கான தூக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்த மூத்த வழக்கறிஞர் மொகித் சவுத்ரியே வீரப்பன் கூட்டாளிகளுக்காகவும் ஆஜராக இருக்கிறார். அவர் நாளை தமிழகம் வந்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார். பாலாறு கண்ணிவெடித் தாக்குதல் வழக்கை மறுவிசாரணை செய்யவும் அவர் தமது மனுவில் கோரக் கூடும் எனக் கூறப்படுகிறது.