புதன், வியாழன் பெங்களூரில் பஸ், ஆட்டோ ஸ்டிரைக்: என்ன செய்யப் போறீங்க?
விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராக வரும் 20 மற்றும் 21ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு 11 வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அவர்களின் அழைப்பை ஏற்று அந்த 2 நாட்களும் நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில் வர்த்தக சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) மற்றும் பெங்களூர் மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழகமும்(பி.எம்.டி.சி.) ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஐடி நகரமான பெங்களூரில் கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பிஎம்டிசி பேருந்துகள் ஓடாது.
மேலும் பெங்களூரில் போலீசார் தொல்லை கொடுப்பதை கண்டித்து அந்த இரண்டு நாட்களும் ஆட்டோக்களும் ஓடாது. இந்த வேலைநிறுத்தத்தில் ஆதர்ஷா ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட 7 முக்கிய ஆட்டோரிக்ஷா சங்கங்கள் கலந்து கொள்கின்றன.
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பெங்களூரில் உள்ள 22,000 பள்ளி வேன்களில் சுமார் 11,000 முதல் 12,000 வரை ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், ஆட்டோக்கள் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் செய்தி அறிந்து அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றனர்.