5 வெடக் கோழி, 500 ரூபாய்… கற்பழிப்பு குற்றவாளிக்கு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடிபோதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 5 வெடக்கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதித்து கட்டப்பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் சக்ரதார்பூர் பகுதியில் குடிகாரன் ஒருவன் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார். இது விசாரணைக்கு வந்தது. விசாரித்த நாட்டாமை, குற்றவாளிக்கு 5 வெடக் கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆட்டுக்கிடாய் அபராதம்
இதேபோல் தலைநகர் ரஞ்சியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாரிடம், குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவனை அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு ஒரு ஆட்டுக்கிடாவை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தனர்.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா? ஆண்மை நீக்கம் செய்வதா? என்று நாடு முழுவதும் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னமும், ஆட்டுக்கிடாய் அபராதம் போட்டு குற்றவாளியை தப்பவைத்துவிடுகின்றனர் என்பதுதான் வேதனையான விசயமாக உள்ளது.