மாலத்தீவு பதற்றம்- இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்த நஷீத்தை கைது செய்ய கோர்ட் உத்தரவு!
மாலே: மாலத்தீவு இந்திய தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவில் கயூம் ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகம்மத் நஷீத். கடந்த ஆண்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமான 'நீதிபதியை கைது செய்ய' உத்தரவிட்ட வழக்கில் நஷீத்துக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் நஷீத் அரசியல் அகதியாக தஞ்சம் புகுந்தார். அவருடன் அவரது ஆதரவு எம்.பிக்கள் 12 பேரும் தஞ்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து இருநாடுகளிடையே உறவில் பெரும் விரிசல் விழுந்திருக்கிறது. மாலத்தீவுக்கான இந்திய தூதரை நேரில் வரவழைத்த அந்நாட்டு அரசு கடும் கண்டனமும் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களாக இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்று அந்நாட்டின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹசன் ஹனீப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் சர்வதேச விதிகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் இந்திய தூதரகத்துக்குள் நாங்கள் நுழையப் போவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.