நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்: வங்கி சேவை பாதிக்கும்; தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடுமா?
விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. உள்ளிட்ட 11 வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சம்மேளனம், இன்சூரன்ஸ், தபால் துறை, கலால், வருமான வரித்துறை, சுங்கத் துறை, கப்பல், பாதுகாப்பு துறை, மத்திய கணக்கு துறை, தொலைதொடர்புத் துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பங்கேற்கின்றன. இந்நிலையில் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தொழிற்சங்க தலைவர்களுடன் அமைச்சர்கள் குழு நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கவும், ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 75,000 வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும்.
சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் ஊழியர்கள், கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்ததில் பங்கேற்கவிருப்பதால் தலைநகரில் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 70,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் ஒரு சில தொழிற்சங்கங்களைத் தவிர மற்றவை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பேருந்து, ஆட்டோ சேவை பாதிக்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார்.
தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில்,
15 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தொமுச இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. எங்களை் உரிமையைக் காக்க எந்த இழப்பையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் கூறுகையில்,
இந்த வேலைநிறுத்தத்தில் எங்கள் சங்கம் கலந்துகொள்ளாது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக காங்கிரஸின் துணை அமைப்பான ஐ.என்.டியூ.சி. அறிவித்துள்ளது. இதனால் அதன் நிர்வாகிகளை உடனே மாற்றும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேரில் கோரிக்கை வைப்போம் என்றரார்.