இலங்கையுடனான பொருளாதார உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும்: வேல்முருகன்
தமிழீழ மண்ணில் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைகாரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிற வகையில் தமிழ் நெஞ்சங்களை பதற வைக்கக் கூடிய இன்னொரு இனப்படுகொலை சாட்சி அம்பலமாகியிருக்கிறது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன் 12 வயதே ஆன பாலகன் பாலச்சந்திரன், போரின் போதே கொல்லப்பட்டார் என்ற சிங்களக் கொலை வெறியன் ராஜபக்சேவின் கோயபல்ஸ் பிரச்சாரம் தற்போது சர்வதேச அரங்கத்தில் அம்பலமாகிவிட்டது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் கூட உள்ள நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளியாகக் கூடிய தி இன்டிபென்டெட் நாளேடு, சேனல் 4 தொலைக்காட்சி ஆகியவை பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட உண்மையான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.
இத்தகைய கோரப் படுகொலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை சிங்கள கொலைகார அரசை நேச சக்தியாகவே இந்திய அரசு இன்னமும் கருதுகிறது எனில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவை எதிரி' நாடாகத்தானே கருத வேண்டியிருக்கும்.
இதன் பின்னராவது இலங்கையுடனான பொருளாதார உறவுகளை இந்திய அரசே துண்டித்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்ற குரலை இந்திய அரசே அங்கீகரிக்கவேண்டும். மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்!
தமிழீழப் பகுதிகளில் பன்னாட்டுப் படைகளை நிறுத்தி சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.