தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி வலைதளம் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு என ஒரு புதிய வலைதளம் உருவாக்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி 2012 -2013 ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கென ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தனியாக ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org என்ற புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த வலைதளத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகள், தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் விவரம், ஆட்சி சொல்லகராதி, தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் அவற்றைப் பெற்ற தமிழறிஞர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, நூல் வெளியிட நிதியுதவி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இந்த வலைதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழுக்கு என ஒரு வலைதளம் இல்லை என்ற குறையை தமிழக அரசு நிவர்த்தி செய்துள்ளது.