அமெரிக்காவில் மீண்டும் பனிப் புயல்- விமான சேவைகள் ரத்து!
நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் வீசும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் இருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் பனிப்புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மத்தியமேற்கு பகுதியில் பனிப்புயல் வீச தொடங்கியுள்ளது. இதனால் மினிசோட்டா முதல் ஓயோ வரையில் கடுமையாக பனி கொட்டுகிறது. டெக்சாஸ், ஜார்ஜியா பகுதியில் இடி முழக்கத்துடன் பனிப்புயல் வீசியது. இதில் இருவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது
கான்சாஸ் பகுதியில் பல இடங்களில் 38 சென்டி மீட்டர் அளவிற்கு பனிபொழிந்தது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி கொட்டி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விமான நிலையம் மூடப்பட்டு சுமார் 350 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.