கொல்கத்தா காய்கறிச் சந்தையில் தீ: 18 பேர் பலி
கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் இருக்கும் சூர்யாசென் காய்கறி மார்க்கெட்டில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க்கெட்டில் இருந்த பலரும் சிக்கிக் கொண்டனர். தீயில் சிக்கி 4 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காய்கறி மார்க்கெட்டில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு 25 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.