'அம்மா’ உணவகத்தில் இனி புதினா சட்னி: மாநகராட்சி திட்டம்
சென்னை: ஏழை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் இட்லிக்கு சாம்பாருடன் புதினா சட்னியும், சாம்பார், தயிர் சாதங்களுக்கு புதினா சட்னியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு வேலை தேடி வருவோர் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் "அம்மா" மலிவு விலை உணவகங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 19-ந்தேதி சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் 2-ம் கட்டமாக கடந்த 24-ந்தேதி 24 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன.
கோயம்பேடு, சென்ட்ரலில் அம்மா உணவகம்
அடுத்த கட்டமாக கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் வேலை தேடி சென்னைக்கு வருபவர்கள், ஏழைகள் ஏராளமானவர்கள் அடங்குவர்.
இதேபோல் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு அம்மா மலிவு விலை உணவகம் பயனளிக்கும். அம்மா உணவகம் அமைப்பதற்கான இடங்களை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தேர்வு செய்து வருகிறார்கள்.
இனி புதினா சட்னி
அம்மா மலிவு விலை உணவகத்தில் இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் இட்லியில் சாம்பாருடன் சட்னியும், சாம்பார், தயிர் சாதத்துடன் அப்பளம், ஊறுகாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர். சில அமைப்பினர் இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் கூட கேட்டனர். இதனையடுத்து இனி புதினா சட்னி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.