திருவிழாக்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் திருவிழாக்களில் குழந்தைகளை வெயிலில் அடித்து, துன்புறுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கொடூரம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க வேண்டிய சமூக நலத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகளவில் நடந்து வருகின்றன. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை ஒரு பக்கம். மறுபக்கம் குழந்தைகளை பிச்சையெடுக்கவும் வைக்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாடகைக்கு குழந்தைகளை எடுத்து பிச்சையெடுக்க வைக்கும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பெற்றோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3 முதல் 7 வயது வரை குழந்தைகளை வாடகைக்கு விடும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.
நெல்லை, ரயில் நிலைய சாலை, டவுன் ரத வீதிகள், தூத்துக்குடி பஸ் நிலையம் ஆகியவற்றில் பிச்சையெடுக்கும் குழநதைகள் போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்நது கொண்டு தான் இருக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்ற சமயத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியது. கலை கூத்தாடி தலைவன் ஒருவர் தன் மகனின் கையில் பிளேடால் கீறியும், சாட்டையால் அடித்தும் ரத்தம் வரவழைத்து காட்டினான். இதனால் அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டனர். இதை கண்டு பரிதாப்பட்ட சிலர் காசுகளையும், சிலர் அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினர்.
இந்தகைய கொடூரங்கள் குறித்து குழந்தைகள் நல குழும தலைவர் நளன் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்களை ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
குழந்தைகளை வைத்து இந்த பிச்சையெடுப்பவர்கள் இது அவர்களது குழந்தைகளா அல்லது நாட்டில் ஆயிரக்கணக்கில் காணாமல் போகும் குழந்தைகளை இவர்கள் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைக்கிறார்களா என்பதை கண்டறிந்தால்தான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும். காவல்துறையினரும் சமூக நலத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications