பட்ஜெட் 2013 எதிரொலி: இனி சிகரெட், செல்போன், இம்போர்டட் கார், பைக் விலை உயரும்
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு,
ரூ. 2,000க்கு மேல் மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிக்கப்படும். சிகரெட் மீதான வரி 18 சதவீதம் அதிகரிக்கப்படும். எஸ்யூவி கார்கள் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு கார்கள், பைக்குகள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம். அதே சமயம் பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம். கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும். கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும்.
மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரிப்படும்.
செட்டாப் பாக்ஸ் விலை உயரும்:
செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள், கேபிள் தொலைக்காட்சிகளைப் பார்க்க முக்கிய சாதனமாக மாறிவிட்டிருக்கும் செட்டாப் பாக்ஸுகளுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், செட்டாப் பாக்ஸ் விலையும் கணிசமாக உயரும்.
பருத்தி விலை குறையும்:
விலை குறையும் பொருட்களில் பருத்தி மட்டும் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல தோல் பொருட்கள் விலையும் குறைய வாய்ப்புள்ளது.