காதல் விவகாரத்தால் போலீசில் சிக்கிய 'நான் அவனில்லை' கற்பழிப்பு பிட்டி
ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி(32). அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த வாரம் அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.
முதலில் பிட்டியை போலீசார் ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் காதல் விவகாரத்தால் சிக்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
கண்ணூரில் உள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் ராகவராஜா என்ற பெயரில் பிட்டி பணியாற்றி வந்துள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்ட அதே தொகுதியில் புரோபேஷனரி ஆபீசராக தேர்வு செய்யப்பட்ட பெண் ஒருவருடன் பிட்டிக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண் அதே பகுதியில் வேறு ஒரு கிளையில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அவர்களின் காதல் மட்டும் தொடர்ந்தது.
அப்பெண் பிட்டியை மணக்க விரும்பினார். ஆனால் பிட்டியோ திருமணம் செய்தால் தனது ரகசியமெல்லாம் அம்பலமாகிவிடும் என்று பயந்து நழுவினார். ஆனால் அப்பெண் அவரை விடுவதாக இல்லை. தன்னுடைய காதல் பற்றி தனது பெற்றோரிடம் அந்த பெண் தெரிவித்தார். இந்த காதலுக்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தொலைக்காட்சியில் கற்பழிப்பு குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானது. அதில் இருக்கும் ஒருவர் தன் மகளின் காதலர் போன்று இருப்பதாக அவர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கும் பிட்டி மீது சந்தேகம் வந்தது.
இந்நிலையில் பிட்டி வேலை பார்க்கும் வங்கிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் ராகவ ராஜாவாக பணிபுரிபவர் கற்பழிப்பு குற்றவாளி பிட்டி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த கடிதத்ததை போலீசாரிடம் கொடுத்தனர். அதன் பிறகு தான் பிட்டி கைதானார்.
பிட்டி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 4 தனிப்படைகளில் ஒன்று அவரை நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தான் அழைத்துச் சென்றது. இதற்கிடையே திருவாங்கூர் ஸ்டேட் வங்கி ராகவராஜா என்ற பெயரில் பணியாற்றிய பிட்டியை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதையடுத்து பிட்டி குறித்து விசாரிக்க பையனூர் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலைமையிலான தனிப்படை ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் விசாரணை நடத்தியது. புட்டபர்த்தியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தான் பிட்டிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அலுவலகத்திலும், பிட்டி கணக்கு வைத்திருந்த கனரா வங்கி கிளையிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வாடகைக்கு தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் கிருத்தையாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிட்டியை சாய்பாபா பக்தரான ஒரு விஐபி தான் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கிருத்தையா தெரிவித்தார். அந்த விஐபி யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக போலீசில் சிக்கிய அவர் தான் பிட்டி என்று முதலில் ஒப்புக் கொண்டுவிட்டு பிறகு தான் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்த ராகவராஜா தான் என்று சாத்திதார். இதையடுத்து தான் தனிப்படை புட்டபர்த்தி விரைந்தது. புட்டபர்த்தியில் பிட்டி தங்கியிருந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அங்கு இருந்த லேப்டாப், கல்லூரி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, அவர் கைப்பட எழுதிய டைரி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிட்டி கேரளா செல்லும் முன்பு புட்டபர்த்தியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
இதையறிந்த போலீசார் ஆசிரமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராமாராவிடம் விசாரணை நடத்தினர். அவர் படித்ததாகக் கூறப்படும் கல்லூரிக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். பிட்டி வீட்டில் இருந்து பறிமுதல் செய்த சான்றிதழைப் பார்க்கையில் அவர் தானாகவே போலிச் சான்றிதழ் தயாரித்துள்ளார் என்று தெரிகிறது. பிட்டி ஆள்மாறாட்டம் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. அவற்றை பெனுகுண்டா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.