நாடாளுமன்ற தேர்தல்: காங் கூட்டணிக்கு பாடம் புகட்ட தயாராகும் தமிழக மீனவர்கள்
கன்னியாகுமரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர் மற்றும் கொல்லம் மீனவர்கள் 2 பேரை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்ததால் அம்மாநிலத்தில் இத்தாலி மாலுமிகளுக்கு எதிராக கேரள அரசியல்வாதிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் பணத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வைத்தது மட்டுமல்லாமல் விரைவில் தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர்.
கேரள மக்களுக்கு சிறு பிரச்சனை என்றாலும் மத்தியில் இடம்பிடித்துள்ள ஏ.கே. அந்தோணி, வயலார் ரவி, சசிதரூர் போன்றவர்கள் உடனடியாக குரல் கொடுத்து மத்திய அரசை நிர்பந்திக்கின்றனர். மாலுமிகளை இத்தாலி அரசு அனுப்ப மறுக்கும் விஷயத்திலும் இதே நிலைப்பாடு தான் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினந்தினம் தாக்கப்படுவதற்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ப. சிதம்பரம், ஜிகே வாசன், நாராயணசாமி போன்றோர் எத்தனை முறை குரல் கொடுத்துள்ளனர்?. இவர்களுக்கு தமிழகம் என்பது தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவுக்கு வரும் சுற்றுலாத்தலம். தமக்கு பிடித்த கட்சித் தலைமை அதிக இடங்கள் பிடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஓட்டு போடுவதுதான் தமிழன் செய்யும் உச்சக்கட்ட முட்டாள்தனம்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா அரசியல்வாதிகளின் மாநிலப்பற்றைப் பார்த்துக்கூட தமிழக பிரதிநிதிகளுக்கு புத்தி வருவதில்லை. இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மீனவர் பிரச்சனை போன்ற தமிழர் விரோத செயல்களுக்காக காங்கிரசை கண்டிக்கும் பலர், தேர்தல் சமயத்தில் தான் சார்ந்துள்ள கட்சிக்காக அதே காங்கிரசிற்கு ஓட்டு போடுகின்றனர். கேரளாவில் இறந்த மீனவர்களின் உயிர் வேறு, தமிழக மீனவர்களின் உயிர் வேறா? தொடர்ந்து சுட்டுக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படைக்கு ஒரு கண்டனமாவது தெரிவித்துள்ளதா மத்திய அரசு என்ற கேள்வி தொடர்ந்து தமிழக மீனவர்களால் மட்டுமின்றி எதிர் கட்சிகளாலும் தொடர்ந்து எழுப்பபட்டு வந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் தான் மதிய அரசு இதுவரை இருந்து வந்தது.
அனால் தற்போது கேரள மாநில பிரச்சனையில் உடனடியாக பிரதமர் தலையிட்டு கண்டனம் தெரிவிக்கிறார். இந்த நிலைப்பாடு மத்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்திலும் சரி, தமிழக முன்னேற்றத்திலும் சரி இரட்டை வேஷம் போடுவதாகவே தெரிய வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கூடங்குளம் பிரச்சனை, மீனவர் தாக்குதல் பிரச்சனை, இவைகளையெல்லாம் மனதில் வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிகளுக்கு பாடம் புகட்டவும் மீனவ கிராமங்களில் முடிவு எடுத்து வருகின்றனர்.