சென்னையில் மேலும் 127 'அம்மா கேண்டீன்கள்' திறப்பு.. விரைவில் பிற மாநகராட்சிகளிலும்...
சென்னை: சென்னையைப் போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் கூறியதாவது:
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கை தான் காரணம். தமிழக அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சென்னை மாநகாரட்சியைப்போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய, பண்ணை பசுமை நுகர்வோர் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான நிதி ரூபாய் 50 கோடியிலிருந்து ரூபாய் 100 கோடியாக்கப்படும்.
127 மலிவு விலை உணவகங்கள்:
ஏழை, எளியோர், நலன் காக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மூலம் 73 மலிவு விலை உணவகங்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 127 உணவகங்களை இன்று திறந்து வைத்துள்ளேன்.
ஆக மொத்தம், 200 மலிவு விலை உணவகங்கள் தற்போது சென்னையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்தத் திட்டம் இதர மாநகராட்சிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார்.
முன்னதாக இன்று 127 மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.