ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும்… வைகோ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப் படுத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28 இல் தந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் , ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன காரணங்களை ஏற்பதற்கு இல்லை என்றும், அதனால் அந்தத் தீர்ப்பை நிராகரிப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் தூத்துக்குடியை அடுத்துள்ள கடலும், தீவுகளும் தேசிய கடல் பூங்கா என்று தமிழ்நாடு அரசு 1986 இல் அறிவித்ததை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு அறிவிக்குமானால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலை குறித்து அகற்றுவது உள்ளிட்ட எந்த முடிவையும் மேற்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்காடியவர்கள், தொண்டு மனப்பாண்மையோடு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்குறிய விதத்தில் செயல்பட்டு உள்ளார்கள் என்றும் நீதிபதி கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
நாங்கள் தொடர்ந்து ஒரு யுத்தம் நடத்துகிறோம். ஒரு களத்தை இங்கே இழந்தாலும், யுத்தத்தைத் தொடருவோம். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வேன். மராட்டிய மாநிலத்தில் இரத்னகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டி, கடப்பாறையோடு ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால், மராட்டிய மாநில அரசு லைசென்சை இரத்து செய்தது. தென் தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் அப்படி தாக்குதல் நடத்தவில்லை. அறவழியில் நீதிக்காகப் போராடினோம்.
ஸ்டெர்லைட் மூலம் அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அடியோடு பாழாகிவிட்டது. எண்ணற்றவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அரசாங்க வருமானத்திற்காக தூத்துக்குடி வட்டார மக்கள் உயிர்களை பலியிடுவதா? .
ஆலையை மூட வேண்டும் என்று மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தந்த உத்தரவை, உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார் வைகோ.