10ம் வகுப்பு விடைத்தாள் மாயம்: போதை தபால் ஊழியர் சஸ்பெண்டு
விழுப்புரம்: 10ம் வகுப்பு விடைத்தாள்கள் மாயமான விவகாரம் தொடர்பாக அஞ்சல்துறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சத்திய மங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10 வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள்கள் அடங்கிய கட்டு மாயமாகி உள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இனி வரும் காலங்களில் தேர்வு விடைத்தாள்கள் காணாமல் போவதை தடுக்க எந்த மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் தபால் துறை சீனியர் சூப்பிரண்டு கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் காணாமல் போனது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தபால் ஊழியர் சவுந்தர்ராஜன் கவனக்குறைவாக செயல்பட்டதால் விடைத்தாள் காணாமல் போய் விட்டது. எனவே அவரை சஸ்பெண்டு செய்து இருக்கிறோம். இனி வருங்காலங்களில் இதுபோன்று பரீட்சை பேப்பர்கள் காணாமல் போவதை தடுக்க திண்டிவனம், விழுப்புரம் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகங்களில் சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் வருகிற விடைத்தாள் பார்சல்களை உடனடியாக பெற்று தகவல்களை பெற்று உடனுக்குடன் மேல்அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என்றார்.
போதையில் ஊழியர்
சக்தியமங்கலம் தபால் ஊழியர் சவுந்திராஜன் குடிபோதையில் பணியில் இருந்ததால் விடைத்தாள் கட்டு எங்கோ தவறிவிட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.
தபால் ஊழியரின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலும் விடைத்தாள் கட்டு தொலைந்து போனது தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனைனையும் ஏற்படுத்தி உள்ளது. சவுந்திரராஜனிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரித்தனர். அவர் சென்ற இடங்களில் எல்லாம் போலீசாரும், அதிகாரிகளும் சென்று விடைத்தாள் கட்டு பற்றி விவரங்களை தேடி வருகிறார்கள்.
விடைத்தாள் கட்டுகளை கண்டுபிடிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கபட்டுள்ளது. பார்சல் கிடைக்கும் வரை எந்த முடிவையும் எடுக்க இயலாது என்று தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விடைத்தாள் பார்சல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முழு முயற்சியில் தேடி வருகிறார்கள்.
மாற்றுவழி தேடும் கல்வித்துறை
பத்தாம் வகுப்புவிற்கு இன்னும் 3 தேர்வுகள் மட்டும் நடைபெற வேண்டும். அதனால் தேர்வு முடிந்த பிறகு தபால்துறை மூலம் விடைத்தாள் கட்டு அனுப்புவதை தவிர்த்து வேறு மாற்று திட்டம் மூலம் அனுப்பலாம் என முடிவு செய்யப்படுகிறது. எந்த முறையில் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று விரைவில் முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் மாற்று திட்டத்தை பின்பற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண கடிதங்களே தபால்துறையை நம்பி அனுப்பாமல் தனியார் கூரியர் நிறுவனங்களை மக்கள் நாட ஆரம்பித்துவிட்டனர். இதில் மாணவர்களின் வாழ்க்கையே அடங்கியுள்ள விடைத்தாள்களை நம்பி அனுப்பிய கல்வித்துறையினர் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றனர்.