கல்லூரிகள் திறந்தாச்சு… மீண்டும் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!
தனி ஈழம் கோரி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராடியதை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வுகாலம் நெருங்குவதை அடுத்து இன்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தினமும் கல்லூரியில் காலை, 11:00 மணி முதல், 11:02 மணி வரை மெளன புரட்சி போராட்டத்தை மேற் கொள்ள உள்ளோம். அப்போது மாணவர்கள் எங்கிருந்தாலும் இந்த இரு நிமிடங்கள் அமைதி காப்போம். ஐ.நா. உரிய பதிலளிக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரிட்டோ தெரிவித்திருந்தார்.
கறுப்பு அடையாளப் போராட்டம்
தமிழ் ஈழ விடுதலைக்காக சென்னை செம்பரம்பாக்கம் சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின் கருப்பு அடையாளப் போராட்டம் நடத்தினர். அனைத்து மாணவர்களும் தங்களின் இடது கைகளில் கறுப்பு பட்டி அணிந்து கல்லூரிக்குச் சென்றனர்.
சேலத்தில் சாலைமறியல்
இதனிடையே இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மறவநேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சேலம் ஏற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால், போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பினர். இருப்பினும், மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்குச் செல்லவில்லை; புறக்கணித்து வெளியேறினர்.
திருச்சியில் உருவபொம்மை எரிப்பு
திருச்சியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிவிஎஸ் டோல்கேட் அருகில் ஜமால் முகமது கல்லூரியை ஒட்டி உள்ள தபால் அலுவலகத்தின் எதிரே சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவி படுகாயம்:
இதனிடையே செங்கோட்டையில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மாணவர்களின் போராட்டத்தினால் மூடப்பட்ட கல்லூரிகள் 15 தினங்களுக்குப்பின் இன்று திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குற்றாலம் கல்லூரியில் படிக்கும் மாணவி நித்யா செங்கோட்டையில் தனியார் பேருந்து மூலம் இன்று கல்லூரிக்கு சென்றார். பிரானூர் பார்டர் பள்ளிவாசல் வளைவில் பேருந்து வேகமாக சென்றதால் பேருந்திற்குள் நின்ற மாணவி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
இதேவேகத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதிய மாணவி தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் நெல்லை மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.