பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலாவை கைது செய்யுங்கள் - மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாவை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் கல்லூரியின் கணித துறை பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த ஆடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலர் உங்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் புத்திசாலிகள்.
நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என்று கூறிய அந்த பேராசிரியை, நான் சொல்லும் விஷயத்துக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் படிப்பு விஷயத்திலும் நீங்கள் மேலே சென்று விடலாம். பொருளாதார ரீதியாகவும் உங்கள் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும். பணமும் கிடைக்கும் என்று நிர்மலா கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா தேவி பேச்சு
மாணவிகள் மறுத்தும் விடாமல் பேசும் அந்த பேராசிரியை, நிர்மலாதேவி புரோக்கராக மாறி மாணவிகளிடம் போனில் பேசிய ஆடியோ பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தவே, நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே போனில் பேசியது தான்தான் என்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார்.
கல்லூரி முன்பு போராட்டம்
பெற்றோர்களும், மாணவர்களும் இன்று அரசு தேவாங்கர் கலைக்கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதும் பெற்றோர்கள், மாணவர்களின் கோரிக்கையாகும்.
நிர்மலாவிடம் விசாரணை
இது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னரே மாணவிகளை ஆசைக்கு இணங்க சம்மதிக்க வைக்குமாறு நிர்மலா தேவியிடம் அறிவுறுத்திய அதிகாரிகள் யார் என்பது தெரிய வரும். அப்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா கைதாகிறார்
இந்த விவகாரத்தை மதுரை பல்கலைக்கழகமும் கல்லூரி நிர்வாகமும் தீவிரமாக கையில் எடுத்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரான செல்லத்துரை கூறும்போது, நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை பாயும்
பேராசிரியை நிர்மலா தேவியின் பேச்சின் பின்னணியில் இருப்பது யார் என்கிற கேள்வி இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு மாணவிகளை விருந்தாக்கும் முயற்சியில் பேராசிரியை ஒருவரே ஈடுபட்டிருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தவறு செய்திருந்தது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.