நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பது யார்? யார்? - போலீஸ் விடிய விடிய விசாரணை
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாவிடம், போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
Recommended Video
மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு நிர்ப்பந்தப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூாியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவா் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக நிர்மலா தேவியின் பெயரில் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.
அந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசும் பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவா்களது விருப்பத்திற்க நீங்கள் சம்மதம் தெரிவித்தால் அவா்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.
நிர்மலாவை கைது செய்ய போராட்டம்
சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியான நிலையில், ஊடகங்களிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால், கல்லூரி முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர் நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகார் அளித்த கல்லூரி நிர்வாகம்
இந்த கோரிக்கையை ஏற்ற கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நிர்மலா தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, உள்ளேயே இருந்து கொண்டார்.
விடிய விடிய விசாரணை
இதையடுத்து, பல மணி நேரத்திற்குப் பிறகு நிர்மலா தேவியின் கணவர் கண் முன்னே வீட்டின் பூட்டை உடைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்சுழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பேராசிரியை நிர்மலாவிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
துணைவேந்தரிடம் அறிக்கை
இந்த விவகாரத்தில் உயர் மட்டக்குழு விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தவிட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என்ற உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியது குறித்து விசாரிக்க மதுரைப் பல்கலைக் கழகம் நியமித்துள்ள 5 பேர் கொண்ட குழு இன்று விசாரணையைத் தொடங்க உள்ளது. பேராசிரியை மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை செய்து 15 நாட்களுக்குள் துணைவேந்தரிடம் இந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது