ஓடும் ரயிலில் பெண் மானபங்கம்: தட்டிக்கேட்டவர் தூக்கி வீசப்பட்ட கொடூரம்
திருவனந்தபுரம்: மலபார் விரைவு ரயிலில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களை தடுக்கப் போனவர் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் செறுதுருத்தி பகுதியைச் சேர்ந்தவர் மனு. இவர் தொடுபுழையில் அலங்கார வேலைகள் செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் இவர் ரயிலில் பணிக்கு சென்று விட்டு ஊர் திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் மனு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த பெட்டியில் ஒரு குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணிடம் 4 வடநாட்டு வாலிபர்கள் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டனர். இதை மற்ற பயணிகள் கண்டுகொள்ளாததால் அந்த வாலிபர்களின் தொல்லை எல்லை மீறியது.அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர்.
இதைப்பார்த்த மனு அந்த வாலிபர்களை கண்டித்ததையடுத்து, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதற்குள் வெள்ளத்தோல் நகர் என்ற இடத்தில் ரெயில் நின்றதும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இறங்கி சென்று விட்டனர். பிறகு ரெயில் புறப்பட்டதும் அந்த 4 வாலிபர்களும், மனுவை அடித்து உதைத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த மனு இரவு முழுவதும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை அந்த வழியாக சென்ற ஒருவர் இதைப்பார்த்து விட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மனுவை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களை மனு தெரிவித்துள்ளார். அவர் தற்போது மயக்க நிலையில் உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனு கூறிய அடையாளத்தை வைத்து அந்த 4 வாலிபர்களையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.