லாரி கவிழ்ந்து கார் மீது விழுந்து தீப்பிடித்து ராணுவ வீரர், குழந்தை பலி
திருவனந்தபுரம்: கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கார் மீது விழுந்து தீப்பிடித்த விபத்தில் ராணுவ வீரர் , ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள்.
திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனம், அங்கிருந்து ராட்சத கிரானைட் கற்களை லாரிகள் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு செல்வது வழக்கம். இதுபோல நேற்றும் ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது. லாரியை வள்ளியூரைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 31) ஓட்டினார். கிளீனராக சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் (55) இருந்தார்.
ஆற்றிங்கல், கிளிமானூர் பகுதியில் லாரி வந்த போது முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் அந்த காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே இன்னொரு வாகனம் வந்ததால் நிலை குலைந்த லாரி டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக சரிந்து கார் மீது விழுந்தது.
லாரியில் இருந்த ராட்சத கிரானைட் கற்களும் கார் மீது விழுந்து நசுக்கியதில் காரின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்தது. 60 அடி உயரத்திற்கு தீ ஜுவாலைகள் எழுந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இதுபற்றி ஆற்றிங்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். காற்று வேகமாக வீசியதாலும், லாரியை அகற்ற முடியாததாலும் காரில் இருந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. வாகனங்கள், ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மூலம் லாரியை அப்புறப்படுத்தி அதன் அடியில் சிக்கி இருந்த காரை மீட்புப்படையினர் மீட்டனர். காருக்குள் 3 பிணங்கள் அடையாளம் தெரியாத நிலையில் கருகி கிடந்தன. அவற்றை ஆற்றிங்கல் போலீசார் கைப்பற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் இறந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்தவர்கள் ஆற்றிங்கல்லை அடுத்த செங்குளம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்ரீஜித் (வயது 34), அவரது சகோதரி மகள் மீனாட்சி (8) மற்றும் உறவினர் கங்காதரன் (60) என்று தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் காரில் அருகில் உள்ள பஜாருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிர் இழந்தது தெரிய வந்தது.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மாரியப்பன், கிளீனர் மாணிக்கம் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி ஆற்றிங்கல் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக ஆற்றிங்கல்-கிளிமானூர் ரோட்டில் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த வழியாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications