160 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்தியாவில் ஓடிய முதல் பயணிகள் ரயில்
சென்னை: இந்தியாவில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கி 160வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தருணத்தில் கூகுள் தனது முதல் பக்கத்தில் ரயில் டூடுள் போட்டுள்ளது.
இந்தியாவில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கி இன்றுடன் 160 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 160வது ஆண்டு விழாவை கௌரவிக்கும் விதமாக கூகுள் தனது முதல் பக்கத்தில் ரயிலை டூடுளாக வைத்துள்ளது.
கூகுள் தனது முதல் பக்கத்தில் டூடுள்கள் போடுவது வழக்கம். இந்த டூடுள்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வேயின் சரித்திரத்தில் சில பக்கங்களைப் பார்ப்போம்.
ஸ்டாக்டன்-டார்லிங்டன் ரயில்
1825ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இங்கிலாந்தின் ஸ்டாக்டனில் இருந்து டார்லிங்டனுக்கு முதன்முதலாக பயணிகள் ரயில் விடப்பட்டது. இதையடுத்து தான் இந்தியாவுக்கு ரயில் வந்தது.
மும்பை-தானே ரயில்
1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி மதியம் 3.35 மணிக்கு போரீ பந்தரில் (மும்பை) இருந்து தானேவுக்கு முதன்முதலாக பயணிகள் ரயில் விடப்பட்டது. 14 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 400 பேர் பயணம் செய்தனர்.
நீராவி ரயில்
1852ம் ஆண்டு நவம்பர் மாதம் நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் ரயில் இந்தியாவில் முதன் முதலாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. அதன் பிறகு 1853ம் ஆண்டில் ஏப்ரல் 16ல் அதிகாரப்பூர்வமாக நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
1856ல் ராயபுரம்-வாலாஜா நகர் சென்ற ரயில்
1856ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி ராயபுரத்தில் இருந்து வாலாஜா நகர்(ஆர்காட்) வரை முதன் முதலாக ரயில் இயக்கப்பட்டது. பெங்களூர் பகுதி 1864ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது.
வட இந்தியாவின் முதல் ரயில்
1859ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி அலகாபாத்தில் இருந்து கான்பூர் வரை சென்ற ரயில் தான் வட இந்தியாவின் முதல் ரயில் ஆகும்.
நீலகிரி ரயில்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் நீலகிரி மலை ரயில் 46 கிமீ மலைப்பாதையில் செல்கிறது. இதன் முதல் பகுதிக்கான வேலைகள் 1889ம் ஆண்டில் குன்னூர் வரை முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1903ம் ஆண்டில் தான் இந்த ரயில் ஊட்டி வரை விரிவுபடுத்தப்பட்டது.
11,000 ரயில்கள், 1.65 மில்லியன் ஊழியர்கள்
இந்திய ரயில்வே தற்போது தினமும் 7,000 பயணிகள் ரயில் உள்பட 11,000 ரயில்களை இயக்கி வருகிறது. ரயில்வே துறையில் 1.65 மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர்.