தயாநிதி தொடர்புடைய ஏர்செல் விவகாரம்: விசாரணையை ஜூலையில் முடிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் இறுதி கெடு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ஏர்செல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சில ஆதாரங்களைத் தாக்கல் செய்துள்ளேன். அதன் மீதான சிபிஐ விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை என்றார்.
இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மீது சிபிஐ நடத்திய விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிந்துவிட்டது. மொரீஷியஸ், பெர்முடா, பிரிட்டன், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு பதில் கிடைத்து விட்டது. ஆனால், மலேசியாவில் இருந்து சிபிஐ-க்கு முழுமையாக ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சிங்வி, ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை தொடர்பாக சில ஆவணங்களை சுவாமி அளித்துள்ளார். அவை மீதான சிபிஐ அறிக்கையைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது. வெளிநாடுகளில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையிலும் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், சிபிஐ விசாரித்து முடிக்கும்வரை சுவாமி காத்திருக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து சிபிஐ வழக்கறிஞர் வேணுகோபால், வெளிநாடுகளில் விசாரணை நடத்தி முடிக்க வசதியாக சிபிஐக்கு மேலும் சில காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜி.எஸ். சிங்வி, வெளிநாடுகளில் சிபிஐ கோரிய விவரங்கள் கிடைக்கவில்லையென்றால் இந்த வழக்கை விட்டு விட முடியாது. இந்தியாவில் நடத்திய விசாரணையை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். எனவே, ஏர்செல் மேக்சிஸ் வழக்கை ஜூலை மாதத்தில் முழுமையாக விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யத் தவறினால், இந்த வழக்கை பிரத்யேகமாக விசாரிக்க ஒரு வாரம் ஒதுக்கும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் அல்லது இந்த வழக்கில் சில உத்தரவைப் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த வழக்கில் இதுவரை விசாரணை நிலவர அறிக்கயை மத்திய கண்காணிப்பு ஆணையம் சிபிஐ தாக்கல் செய்து வந்தது. அடுத்த விசாரணைக்கு முன்பாக இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை நேரடியாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.