விடாது கருப்பு.. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் 4 வார காலத்தில் பதிலளிக்குமாறு கலாநிதி மற்றும் தயாநிதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசிய தொழிலதிபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க இயலாது என்று நேற்றுதான் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மாறன் சகோதரர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத் தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரின் ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக தயாநிதி மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் முடிவாக, கடந்த பிப்ரவரி மாதம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது.
விசாரணை நடத்திய நீதிபதிகள், தயாநிதி மாறன், கலாநிதிமாறன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், இருவரையும் 4 வர காலத்திற்குள் உரிய பதிலளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications