பெங்களூர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் சிக்கவில்லை... துப்பு கொடுத்தால் ரூ 5 லட்சம் பரிசு
பெங்களூர்: பெங்களூர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாஜக அலுவலகம் அருகே புதன்கிழமை குண்டு வெடித்ததில் 11 போலீஸார் உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டுச் சம்பவம் குறித்து புலன் விசாரணை தீவிரமடைந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடுவதில் காவல் துறையின் இப்போதைய நிலை குறித்து கர்நாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் லால்ரொக்குமோ பச்சாவ் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

இந்த குண்டு வெடிப்பு குறித்து துப்பு துலக்குவதற்காக பெங்களூர் மாநகர இணை ஆணையர் பிரணாப் மொகந்தி தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பயங்கரவாதிகள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ள போதிலும், இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் தொடர்பாகக் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதில் உள்ளூர்வாசிகளுக்குத் தொடர்பு உள்ளதா, அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணங்களிலும் ஆராய்ந்து வருகிறோம். சம்பவ இடத்தில் கிடைத்த அனைத்து துப்புகளையும் சேகரித்து ஆராய்ந்து வருகிறோம். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளையும் ஆராய்ந்து வருகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications