ஸ்பெக்ட்ரம் ஊழல்- நான் ஒன்றுமறியாதவன்.. பிரதமருடன் ஆலோசித்தே முடிவுகளை எடுத்தேன்: ராசா
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தபப்ட்டது. இதில் தாம் ஆஜராகி சாட்சியம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ஆ.ராசா கோரியிருந்தார். ஆனால் இதனை பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை ஆ.ராசாதான் தவறாக வழிநடத்தினார் என்று பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தாம் ஒன்றுமறியாதவன் என்பதை நிரூபிப்பேன். நான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுமே பிரதமருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டவைதான். இதுதொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு பல நூறு பக்க ஆவணங்களை நான் அனுப்பி வைக்க இருக்கிறேன் என்றார் அவர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசாவை பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பு சாட்சியம் அளிக்க அழைக்காமலேயே அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர்... இது அர்த்தமற்றது... அவர் மீது இப்பொழுது குற்றம்சுமத்துகிறவர்கள் அவரை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
அதன் பிறகு அவர்கள் அறிக்கைவெளியிட்டிருக்க வேண்டும். ஆ.ராசாவை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க விரும்பவில்லை என்கிற போது அதன் அறிக்கை எப்படி சரியானதாக இருக்க முடியும்?. அவர் பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பு சாட்சியமளிக்காத நிலையில் அந்த அறிக்கையே ஒன்றுக்கும் பயனற்றது. தற்போதையது ஒரு வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கையை திமுக உறுப்பினர்கள் கையெழுத்து இல்லாமல் எப்படி தாக்கல் செய்வார்கள் என்று பார்ப்போம் என்றார் அவர்.